அன்றாடத் தொகுப்புகள்: நவம்பர் 10, 2011

கட்டாததை எப்படி அவிழ்ப்பது?

ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.

ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.

வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.

பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது!

சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.

கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.

 “அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே?” என்றார்கள்.

“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”

 “அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”

“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”

 “சொன்னதைச் செய்யுங்கள்”

அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.

இது சுரேஷ் பத்மனாபன் எழுதிய On cloud 9 என்கிற ஆங்கில நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் கதை. எந்தக் கருத்தை வலியுறுத்த அவர் இதைச் சொன்னார் என்று ஊகிக்க முடியுமா?

15,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கும் இந்த நூல் தமிழில் வர இருக்கிறது. அதில் இதற்கு விடை இருக்கிறது. தமிழ்ப்பதிப்பின் ஆசிரியர் யார் தெரியுமா?