ஆக்டிவ் லிஸனிங் என்றால் என்ன?

ரகுவை எல்லாருக்கும் பிடிக்கும்.

அவனோடு அரட்டை அடிப்பது என்றால் எல்லாருக்கும் பிடித்த விஷயம். இத்தனைக்கும் அவன் ஒரு அதி புத்திசாலியோ, இனிக்க இனிக்கப் பேசுகிறவனோ கிடையாது. சரியாகச் சொன்னால் அவன் பேசுவது ரொம்பக் குறைவாக இருக்கும். பின்னே ஏன் எல்லாருக்கும் அவனைப் பிடிக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.

நாம் பேச ஆரம்பிக்கும் போதே நாற்காலியை இழுத்து முன்னால் போட்டுக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வான். நம் முகத்தை நேராகப் பார்ப்பான்.

“சொல்லுங்க” என்பான் புன்னகையுடன்.

“நேத்து, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ல வந்துகிட்டிருந்தேன்” என்று ஆரம்பிப்பேன்.

“நீங்க பாட்டுக்க ஒரு புஸ்தகம் படிச்சிகிட்டு உட்கார்ந்திருக்க மாட்டீங்களே?” என்பது முதல் ரியாக்‌ஷனாக இருக்கும்.

“கரெக்ட்” என்பேன் சந்தோஷமாக.

“சொல்லுங்க” என்பான் திரும்ப.

“எதிர்ல இருந்தவர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் டாக்ட்டரேட் பண்ணவராம்.”

“உங்களுக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரியே ஆகாதே?”

“அட, அதெப்படி உனக்குத் தெரியும்?”

“ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை சாய்ஸ்ல விட்டவராச்சே நீங்க?”

இவ்வளவு போதும். உங்களுக்குத் தெரிந்திருக்கும். ரகு செய்வதற்குப் பெயர் ஆக்ட்டிவ் லிஸனிங். பதில் சொல்கிற நோக்கமோ, சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணமோ இல்லாமல் கேட்டுக் கொள்வது மட்டுமே நோக்கமாக இருப்பது. பொதுவாக இது எல்லாருக்கும் சாத்தியப்படுவதில்லை.(எனக்கும்).

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

வேணுவுடன் பேசும் போது அனுபவம் வேறு விதமாக இருக்கும்.

’நேத்து பிருந்தாவன்ல வந்தேன்’ என்று சொன்னதுமே,

“ப்ச்.. என்ன பிருந்தாவன். முன்னயெல்லாம் ஜோலார்ப்பேட்டை, அதை விட்டா பெங்களூர்தான்னு இருந்தது. கண்ட கண்ட இடத்தில எல்லாம் நிறுத்தி லொடக்கான் வண்டி ஆயிடிச்சு. கொஞ்ச நாள்ள சதாப்திக்கும் இதே கதி ஆகப் போகுது. நம்ம ஊர்ல சூப்பர் ஃபாஸ்ட் ஓட்டுகிற அளவு டிராக்கும் இல்லை, லெவல் கிராஸிங் டிஸிப்ளினும் இல்லை. ஒருக்கால் எல்லாத்தையும் சப்வேயா மாத்…….” என்று கேப் விடாமல் எஃப்.எம்.ரேடியோ ஜாக்கி போல பேசிக் கொண்டே இருப்பார்.

அவர் எச்சில் முழுங்கும் கேப்பில் உள்ளே புகுந்து ஆர்கானிக் கெமிஸ்ட்ரி டாக்ட்ரேட்டில் ரெஸ்யூம் செய்தால்,

“கம்பஷனுக்கும், பர்னிங்குக்கும் வித்யாசம் தெரியாதவனுக்கெல்லாம் கெமிஸ்ட்ரில டாக்ட்ரேட் குடுத்துடறாங்க. நாம ஏதோ பி.ஹெச்.டி ந்னதுமே அவன் பெரிய ஆல்பர்ட் ஈன்ஸ்டின்னு நினைச்சிடறோம். ரிஸர்ச்சோட ஆர்க்கிடெக்சருக்குத்தான் டாக்ட்ரேட் தர்ராங்கன்னு நினைக்கிறேன். என் கஸின் ஒருத்தன் பழைய ரிஸ்ர்ச் ஒண்ணை எடுத்து……”

சேன்ஸே இல்லை. உங்களால் பேசவே முடியாது.

சரி போகட்டும், இதுவும் ஒரு மாதிரி இன்வால்வ்மெண்ட் என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் சிலர் வெறுமனே ‘ம்ம்ம்.. ம்ம்ம்’ என்று புறா மாதிரி சப்தம் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். கையில் இந்தியன் எக்ஸ்பிரஸ், கண்ணில் என்.டி.டி.வி என்று உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பார்வை கூட உங்கள் பக்கம் திரும்பாது. முடிந்தால் ’சென்செக்ஸ் ஃபார்ட்டி ஃபோர் பாயிண்ட்ஸ் ஏறியிருக்கு’ என்று உங்களுக்கு ஆகாத சப்ஜெக்ட்டுக்கு ரிடைரக்ட் செய்ய முயல்வார்கள்.

‘அவரோட அரட்டை அடிக்கிறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும்ங்க’ என்று யாரை எல்லாரும் சொல்கிறார்களோ, அவர் உங்களை அரட்டை அடிக்க அனுமதிக்கிறவர் என்று அர்த்தம்.

இது அரசியல் கட்டுரை அல்ல!

ஆரம்ப காலத்தில் இருந்தே சரித்திரப் பாடம் எனக்கு ஆவதில்லை.

இதற்கு நிறைய காரணங்கள். முழுக்க முழுக்க டப்பா அடித்தே ஆக வேண்டும் என்பது முதல் காரணம். அடுத்தது சரித்திரத்தில் மூளைக்கு வேலை இல்லை. புரிந்து கொள்ளச் சிரமமாக அதில் எதுவுமில்லை. PV = rT என்று டிரைவ் செய்கிற போது வருகிற வெற்றி உணர்வு சரித்திரத்தில் கிடைக்காது. சில நிகழ்வுகளும் அவை நடந்த காலங்களும்தான் பெரும்பாலும் சரித்திரம் உள்ளடக்கி இருப்பது.

அசோகர் மரங்கள் நட்டதும், அக்பர் ராஜபுத்திரப் பெண்ணை மணந்ததும், சந்திரகுப்தரிடம் அஷ்ட திக்குக் கஜங்களாக எட்டு புலவர்கள் இருந்ததும்(சந்திர குப்தர்தானே?) நம் வாழ்க்கைக்கு என்ன விழுமம் சேர்க்கப் போகிறது? அல்லது நம் சிந்தனையைத்தான் அது தூண்டி விடப் போகிறதா? முதலாவது பானிப்பட் போர் ஒழுங்காக நடக்காததால்தான் இரண்டாவது நடந்ததோ என்கிற மாதிரி சிந்தனைகளைத்தான் சரித்திரம் எனக்குத் தந்திருக்கிறது.

உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகளும், புள்ளிவிவரங்களுமே சரித்திரத்தின் இலக்கணம் என்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. உணர்வுகள் சொற்களாகத்தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. விருப்பமில்லாதவைகளை ஒதுக்கி விட்டு எழுதுவது கூட உணர்வின் வெளிப்பாடுதான். சிலரைக் கொடுங்கோல் மன்னர்கள் என்று சரித்திரம் சொல்கிறது. இது போல ஜட்ஜ்மெண்டல் வெளிப்பாடுகளில் நிச்சயம் உணர்வு தெரிகிறது.

சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகளைத் தனியான நிகழ்வுகளாகப் படிப்பது நிகழ்வின் பரிமாணத்தை உணரப் போதுமானதில்லை. அவற்றுக்குக் காரணமான சம்பவங்கள், அவை நிகழ்ந்த பின் அவைகளின் விளைவாக நிகழ்ந்த சம்பவங்கள் இவற்றுடன் சேர்த்துப் படிக்கிற போதுதான் நிஜமான பரிமாணம் கிடைக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பொதுவாக சரித்திரத்தில் இடமில்லை. அசோகர் பௌத்த மதத்தில் நாட்டம் கொண்டது போன்ற ஒன்றிரண்டு விதி விலக்குகள் உண்டு.

தாஜ்மஹால் என்கிற கட்டிடம் நிறைய உணர்வுகளை உள்ளடக்கியது. அது ஒரு அரசனின் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் அதில் அரசாங்கப் பணம் பெருமளவில் பயன்பட்டிருக்கும். இது குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எதுவுமே அந்தக் காலத்தில் இருந்திருக்காதா?

ஷாஜஹானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஔரங்கசீப் குறித்து சரித்திரம் அவ்வளவு உயர்வாகச் சொல்லவில்லை. மக்களின் வரிச்சுமை அதிகமாயிற்று என்று ஒரு கருத்து உண்டு.(அக்பர் நீக்கியிருந்த ஜிஸியா வரியை ஔரங்கசீப் திரும்பக் கொண்டுவந்து கெட்ட பெயர் வாங்கிக் கொண்டார்). தாஜ்மஹால் மாதிரி ஆடம்பர செலவுகளால்தான் அவருக்கு இந்த நிர்ப்பந்தம் வந்ததோ என்னவோ! தாஜ்மஹாலும் ஷாஜஹானும் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள். ஷாஜஹான் கலைப் பிரியர் என்று பேரெடுத்து விட்டார். ஔரங்கசீப் கொடுங்கோலன் பட்டம் வாங்கி விட்டார்.

முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன? (சரித்திர ஆசிரியர்கள் போலவே நானும் இங்கே ஒரு செலெக்டிவ் டிலீஷன் செய்திருக்கிறேன். என்னவென்று கண்டுபிடியுங்கள்)

புத்தகச் சந்தை-2012, கொஞ்சம் சுய விளம்பரம்

என்னதான் உபயோகமான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சுய முன்னேற்ற நூல்கள் என்றால் சிலருக்கு அலர்ஜி. அவர்களுக்கும் கருத்துக்கள் போய்ச் சேர வேண்டுமே, என்ன செய்வது?

 அதை ஒரு நாவல் வடிவத்தில் எழுதி விட்டால் போயிற்று!

 கதை நகர்ந்து கொண்டே இருக்கும். கதையினூடே சுய முன்னேற்றக் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கும். ஆங்காங்கே சின்ன குட்டிக கதைகள், சில நகைச்சுவைத் துணுக்குகள்.

 போதாதா சுவாரஸ்யத்திற்கு?

 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்று. அதைப் படிக்கிற ஆசை இருந்தாலும் சில பயங்கள். அந்த இலக்கண, இலக்கிய நடை புரியுமா? பக்கத்தில் அகராதி வைத்துக் கொண்டே படிக்க வேண்டுமா? ஏகப்பட்ட பக்கங்கள் இருக்குமே, எப்படிப் பொறுமையாகப் படிப்பது? சுவாரஸ்யமாக இருக்குமா?

 கவலையை விடுங்கள்.

 எளிய நடை. பள்ளிக்கூடப் பையனுக்குக் கூடப் புரியும். ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்கள், விறுவிறுப்பகப் போய்க் கொண்டே இருக்கும். மொத்தம் 130 பக்கங்கள்தான். முழு சிலப்பதிகாரமும் சுவாரஸ்யமான நாவலாக… ரூ.80/= க்கு.

 திருக்குறள் உரைகள் படித்துச் சலித்திருப்பீர்கள்.

 ஒவ்வொரு குறளாக, அதற்கு அர்த்தமாக…. இப்படித் தனித் தனியாகப் படித்தால் சொல்லப்பட்ட கருத்து என்ன என்று எப்படித் தெரிந்து கொள்வது?

 ஒவ்வொரு அதிகாரத்தையும் தொகுத்து ஒரு கட்டுரை. அந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் கோர்வையாக. விலை ரூ.160/=

 ஜென் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 ஆனால் ஒவ்வொரு கதையும் என்ன நீதியைச் சொல்கிறது என்பது பல கதைகளில் புதிராக இருக்கும். அந்த நீதியைச் சுருக்கமாக, சுவையாக சில சமயம் நகைச்சுவையாகச் சொல்லி எழுதப்பட்ட கதைகள். ஜென்னை முழுதாகப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகம்.

 கதைகளின் வழியே ஜென். விலை ரூ.115/=

 மேற்சொன்ன எல்லாப் புத்தகங்களும் புத்தகச் சந்தையில் F-7, கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கும்.

புத்தகச் சந்தை 2012 – திட்டங்கள்

பொதுவாக புத்தகச் சந்தைக்குப் போகும் போது எந்தத் திட்டமும் இருக்காது எனக்கு.

சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சிக்குப் போவது போல ஜஸ்ட் லைக் தட் போய்விடுவேன். அடிப்படையிலேயே என்னிடம் இருக்கும் சில குணங்கள் என்ன புத்தகம் வாங்குவது என்பதற்கு வழிகாட்டும்.

ஜெயின் அண்ட் குப்தாவின் புரொடக்‌ஷன் டெக்னாலஜி புத்தகம் போல குண்ண்ண்ண்ண்டாக இருக்கும் புத்தகங்களைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவைகளின் பக்கம் போக மாட்டேன். (சில விதி விலக்குகள் உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன்). நீஈஈஈஈஈண்ட பாராக்கள் இருக்கும் புத்தகங்களும் அலர்ஜி. அவைகளையும் பொதுவாக நிராகரித்து விடுவேன். அடுத்த லெவல் நீஈஈஈண்ட வாக்கியங்கள் :

பொதுவாக மனிதர்களின் நினைவில் பொதிந்திருக்கும் நிகழ்வுகள் காலம் கடந்து முழுமையாகவும் அது குறித்தான இதர மனிதர்களிடம் செய்த விவாதங்களின் தாக்கத்தில் உண்டான மழுப்பலான மறு-உருவாக்கம் இல்லாமலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எண்ணிக்கையளவில் மிக அல்பமானவை என்பதை நினைவின் அடிப்படையிலான நேர்காணல்கள் செய்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை……………..

என்கிற மாதிரி எழுதுகிற எழுத்தாளர்கள் எல்லா மொழியிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் விருதுகளும் வாங்கியிருக்கிறார்கள்!

அது மாதிரி வாக்கியங்கள் இருக்கும் புத்தகங்களும், சாரி, நோ!

ஐம்பது வருஷத்துக்கு முந்தைய எழுத்தாளர்கள் புத்தகம் என்றால் விசேஷ சுவாரஸ்யம். அதிலும் அவர்களின் கட்டுரைகள் என்றால் படு சுவாரஸ்யம். உதாரணம் : நாடோடி. அவர் புத்தகங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வருஷம் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் திட்டங்களுடன் போகிறேன். நான் வாங்க விழையும் புத்தகங்கள் :

  • நாடோடியின்      கட்டுரைகள்
  • பெரிய      புராணம், ராமாயணம், மஹாபாரதத்திற்கு செய்யுள் செய்யுளாக எழுதப்பட்ட முழுமையான      உரைகள்
  • சாவியின்      இங்கே போயிருக்கிறீர்களா
  • தமிழ் கவிதை      இலக்கணம் பற்றி தெளிவாக, முழுமையாக எழுதப்பட்ட புத்தகங்கள்
  • புதுமைப்பித்தனின்      ஃபாஸிஸ்ட் ஜடாமுனி
  • குறுந்தொகை      உரையுடன்
  • ரா.பி.சேதுப்பிள்ளையின்      தமிழன் அறிவியல் முன்னோடி (புத்தகத்தின் பெயர் அதுதானா என்பதே சந்தேகம்)
  • ஆரிய-திராவிட      வரலாறுகள் (நிச்சயமாக தமிழில் அல்ல. மெக் கிரா ஹில் மாதிரி பதிப்பகங்களாக      இருந்தால் மட்டுமே)

 இன்னும் சில.

 எதெல்லாம் அகப்படுகிறது என்று பார்ப்போம்!

எறங்குய்யா கீழ

”யாருய்யாது வண்டிக்குள்ள சிகரட் பிடிக்கிறது?” கண்டக்டர் எழுந்து பஸ்ஸை ஒரு நோட்டம் விட்டார்.

எனக்கும் சிகரட் வாசனை வந்தது.

யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை.

“கேக்குறனில்ல?”

ம்ம்ஹூம். பதிலில்லை.

எழுந்து இரண்டு பக்கமும் பார்த்தபடி பஸ்ஸின் கடைசி சீட் நோக்கி நடந்தார் கண்டக்டர்.

“யோவ்.. கையைக் காட்டு”

“நா இல்லைங்க. எனக்கு அந்தப் பழக்கமே இல்லை”

தொடர்ந்து நடந்தார்.

“இங்கதான் ஸ்மெல் ஜாஸ்தியா இருக்கு. நீதானா அது?”

“அதான் நீங்க சொன்னதும் கீள போட்டுட்டேனில்ல”

“கீள போட்டியா? எந்திரிய்யா”

“எதுக்கு, அதான் போட்டுட்டேனே”

“எந்திரிங்கிறனில்ல” கோபம் பூரா சேர்த்து விசிலை அவர் ஊத டிரைவர் சட்டென்று பிரேக் போட்டார்.

“எறங்கு”

“அட என்னங்க நீங்க, கீள போட்டுட்டேன்னு சொல்றேன் அப்படியும் எறங்குன்றீங்க”

“எறங்குன்னா எறங்கிடு வீணா பிரச்சின பண்ணாத”

இப்போது பிரயாணிகள் சிலரும் சேர்ந்து கொண்டார்கள்.

“ஏங்க, எறங்கத்தான சொல்றாரு? ஃபைன் கட்டச் சொன்னாரா இல்ல போலீஸ்ல புடிச்சிக் குடுத்தாரா? எறங்குங்களேன், எங்களுக்கு லேட்டாகுதில்ல?”

பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அமைதியாக நடந்தார் இறங்கினார்.

“வண்டிதான் ரெண்டவருக்கு ஒருதரம் நிக்கிதில்ல, எறங்கி தம் அடிக்கிறது, அதுக்குக் கூட பொறுமை இல்லாதவனெல்லாம் பஸ்ல ஏன் வர்ரான்” என்றபடி கதவை மூடினார்.

வண்டி புறப்பட்டது.

இது நடந்து ஒரு வாரமிருக்கும். விஜயபுரம் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த போது அந்த ஆள் எதிர்ப்பட்டார். என்னை அடையாளம் கண்டு புன்னகைத்தார். நானும் சிரித்தேன்.

“ஒண்ணு கேட்டா கோபப்பட மாட்டீங்களே?” என்றேன்.

“கேளுங்க” என்றார் புன்னகை மாறாமல்.

“படிச்சவரா இருக்கீங்க. நாகரிகமா இருக்கீங்க. பஸ்ல சிகரட் பிடிக்கக் கூடாதுன்னு தெரியாதா? அட அட்லீஸ்ட் பிடிச்சா வெளிய தெரிஞ்சிடும்ன்னாவது தெரியாதா?”

“தெரியுமே”

“பின்ன ஏன் அப்டிப் பண்ணீங்க?”

“என் ஊரு கூத்தூருங்க. போனதரம் அங்க நிறுத்தச் சொல்லி கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டேன். மாட்டேன்னுட்டாரு. திருவாரூர்ல எறங்கி வந்துக்கன்னுட்டாரு. உன்ன மாதிரி ஒத்தொத்தனுக்கும் நிப்பாட்டிகிட்டு இருந்தா இது எக்ஸ்பிரஸ் பஸ் இல்லே, மாட்டு வண்டியாய்டும்ன்னு கடுப்படிச்சாரு. ராத்திரி பதினொண்ணரை மணிக்கு திருவாரூர்ல இருந்து கூத்தூருக்கு பஸ்ஸும் கிடையாது, ஆட்டோவும் வரமாட்டான். காலைல வரைக்கும் தேவுடு காக்கணும்.”

“அதனால?”

“அதனாலதான் மஞ்சக் கொல்லை வரும் போதே சிகரட்ட பத்த வெச்சேன். சரிய்யா கூத்தூர்ல இறக்கி விட்டுட்டாரு”

மார்கழி மகா உற்சாகங்கள்

மார்கழி மாதத்து நாட்கள் காலை நாலு மணிக்கே எம்.எல்.வி யின் திருப்பாவையுடன் சுறுசுறுப்பாகத் துவங்கும் நாகப்பட்டினத்தில்.

 சுமார் ஒரு டஸன் கோயில்களில் ஒவ்வொன்றும் சில நிமிட இடைவெளியில் திருப்பாவை ஒலிபரப்பு தொடங்கும். அத்தனைக் கோயில்களுக்கு கேட்டர் செய்யுமளவு சவுண்ட் சர்வீஸ்கள் இல்லாததால் அன்பு, ஆதவன் உள்ளிட்ட ஸ்டார் ஆசாமிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களில் காண்ட்டிராக்ட். நாலு கோயில்களில் ஒரே ஆசாமி சைக்கிளில் போய் இங்கே முடிந்த ரெகார்டை அங்கே போடுவார்.

 ரெகார்ட் போடுவது என்பது எடுத்தமா போட்டமா என்பது மாதிரி சிம்ப்பிள் டாஸ்க் இல்லை. வதக் வதக் என்று சாவி கொடுக்க வேண்டும். ஊசியை மாற்ற வேண்டும். மிகச் சரியாக மூன்றரை நிமிஷத்தில் ரெகார்டைத் திருப்பிப் போட ஆள் பக்கத்தில் இருக்கும் சாத்தியங்கள் ரொம்பக் குறைவு.

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாட்டு முடிந்து கடைசிக் கோட்டில் ஊசி கிர்ரக் கிர்ரக் என்று தேய்த்துக் கொண்டிருக்கும். சில சமயம் சாவி இறங்கி விட்டலாச்சாரியார் படத்து ராட்சஸன் குரலில் எம்.எல்.வி பாடிக் கொண்டிருப்பார். சிலசமயம் கீறல் விழுந்து ‘பேர்பாடி.. பேர்பாடி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும்.

 எந்தக் குறிப்பிட்ட தருணத்திலும் எந்தத் திருப்பாவை பாடுவது எந்தக் கோயில் என்பதை இருந்த இடத்தில் நின்றபடி சொல்லும் வல்லுனர்கள் இருந்தார்கள்.

 “பெருமா கோயில்ல எல்லே இளங்கிளியே போட்டுட்டான். பொங்கல் தீர்திருக்கும். சட்டையப்பர் கோயில்ல மாலே மணிவண்ணா இன்னும் வர்ல்லை. அங்க போகலாம்” என்று தெளிவான ஷெட்யூல் வைத்து பொங்கல் சாப்பிடுகிறவர்கள் உண்டு.

 வருஷம் பூரா பட்டை உரியும் வெய்யில் என்பதால் மார்கழியின் அற்பக் குளிரை டைனமோ லைட் மாதிரி தலையில் துணி கட்டிக் கொண்டு கொண்டாடுவார்கள்.

 எல்லாத் தெருவிலும் நடுவில் சாணி ஃப்ளவர் வாஸில் சொருகிய பூசணிப் பூக்களுடன் ஈஸ்ட்மென் கலர்க் கோலங்கள். கொஞ்சம் அதிகாலையில் போனால் கோலங்களைப் போடும் கலர்களையும் பார்க்கலாம்.

 நாகப்பட்டினம், ஐ மிஸ் யு!

பெண்கள் பலவீனமானவர்களா?

ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்

பதிவின் தலைப்பு பெண்ணுரிமை ஆர்வலர்களை முகம் சுளிக்க வைத்திருந்தால், அது வெளிவர இருக்கும் என் புதிய நூலுக்கு வெற்றி!

 அந்தக் கேள்விக்கு பதிலை நான் இங்கே சொல்லப் போவதில்லை. அதற்கான பதில் ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்’ என்கிற அந்த நூலில் சுவாரஸ்யமாக, விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

 ஒரு சுய முன்னேற்ற நூலின் உபயோகமான கருத்துக்களும், ஒரு நாவலின் விறுவிறுப்பும் ஒரே புத்தகத்தில் இதுவரை கிடைத்ததில்லை. மூல நூலின் ஆசிரியர் திரு. சுரேஷ் பத்மனாபன் அதை நன்றாகச் செய்திருக்கிறார். நாவலைத் தமிழில் கொண்டு வரும் போது அதை நான் எப்படிச் செய்திருக்கிறேன் என்பதை மூல ஆசிரியர் சுரேஷ் பத்மனாபன் சொன்னார். அது என்ன என்பதைச் சொல்லிக் கொள்ள என் தன்னடக்கம் தடுக்கிறது!

 மேலும், இது ஒரு வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்த நூல் அல்ல. அப்படிச் செய்த நூல்களில் தமிழ்த்தனமே இருக்காது. மூல நூலின் கருத்துக்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழ் புத்தக வாசகர்கள் விரும்பும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. வழக்கமான பொழிபெயர்ப்பு நூல்கள் போல டெலிஷாப்பிங் நெட்வொர்க் பேச்சு போலவோ, டப்பிங் செய்த ஆங்கில ஆன்மிக நிகழ்ச்சி போலவோ இருக்கும் என்கிற அச்சம் தேவையில்லை. ஆங்கில மூல நூலைப் படித்தவர்களே இதை ஒரு புது நூலைப் படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் படித்தார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே மூச்சில் இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தார்கள்!

 இவ்வளவு சிறப்பாக இந்த நூல் அமைந்துவிட்டதற்கு முக்கிய காரணம் சுரேஷ் பத்மனாபன் எனக்குத் தந்த அதீத சுதந்திரம்! உன் இஷ்டம் ராஜா, உன் ஸ்டைலில் விளையாடு என்று சொல்லிவிட்டார். பொதுவாக எந்த நூலாசிரியரும் இவ்வளவு சுதந்திரம் தருவதில்லை. அதை மாத்து, இதை மாத்து, இது அப்படி வந்திருக்கணும் என்று உயிரை எடுத்து விடுவார்கள்.

 நான் எழுதி வெளி வருகிற நாலாவது புத்தகம் இது. எல்லாம் ஒரே மாதிரியான புத்தகமாக இல்லாமல் நாலும் நாலு விதமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டியது மூல நூலின் ஆசிரியருக்கு மட்டுமில்லை, கிழக்கு பதிப்பகத்துக்கும்தான்!

 சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஒட்டகக் கதை போட்டு, On Cloud9 என்கிற அந்த ஆங்கில நூலின் தமிழ் வடிவம் வரப் போவதாக எழுதியிருந்தேன்.  (கட்டாததை எப்படி அவிழ்ப்பது?) அதுதான் இந்த நூல்.

 புத்தகத்தின் டைட்டில் பற்றி ஒரு சின்ன விஷயம் :

 பெரிய மனிதர்களுக்கு ஃபோன் பண்ணும் போது அவர்கள் அட்டெண்ட் செய்கிற நிலையில் இருக்கிறார்களா என்பது தெரியாததால் ஒரு மிஸ்ட் கால் கொடுத்து கட் செய்வது பலரின் வழக்கம். கொஞ்ச நேரம் கழித்து அவரே கூப்பிடுவார். ஆனந்தமும் ஒரு பெரிய விஷயம்தானே? அதையும் நாம் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம்? ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள், அதுவே உங்களை அழைக்கும்!

 சரி மிஸ்ட் கால் கொடுக்கிறேன், ஆனந்தத்தின் நம்பர் என்ன என்கிறீர்களா?

 அது, அந்தப் புத்தகத்தில் இருக்கிறது!

 புத்தகச் சந்தையில் இந்த நூல் கிடைக்கும். கிழக்கு ஷோ ரூம்களிலும் ஜனவரி-4 க்குப் பிறகு கிடைக்கும்.

 ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்

 ஆசிரியர் : சுரேஷ் பத்மனாபன், ஷான் சவான்

தமிழில்  : கே.ஜி.ஜவர்லால்

வெளியிடுவோர் : கிழக்கு பதிப்பகம் (http://nhm.in)

New Horizon Media Private Limited
177/103, First Floor, Ambal’s Building, Lloyds Road,
Royapettah.
Chennai – 600014
Tamil Nadu, India

Ph: 91 44 4200 9601

வந்துவிட்டாள் ஓடு!

காலையிலிருந்து கணேஷ் எங்கே போனாலும் நூறடி தூரத்தில் அவனைத் தொடர்ந்து கொண்டே இருந்தாள் அந்தப் பெண்.

முதலில் அவன் கவனிக்கவில்லை. கவனித்தாலும் அது ஏதோ எதேச்சையாக நடக்கிறது என்று நினைத்தான். கடந்த எட்டு மணி நேரத்தில் எட்டாவது முறையாகப் பார்த்ததும்தான் சந்தேகம் ஏற்பட்டது.

நிச்சயப் படுத்திக் கொள்வதற்காக வேகமாக நடந்தான். சுமார் நூறடி நடந்து நின்று திரும்பிப் பார்த்தான். சந்தேகமேயில்லை. அவள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள். யார் இது? எதற்காக என்னைத் தொடர்கிறாள்? நேராக அவளையே கேட்டுவிட்டால் போயிற்று.

கணேஷ் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவள் முகத்தின் அசாதாரணமான அழகின் ஊடே ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது. ஒரு சின்ன ஆம்பிளைத்தனம் அல்லது சூனியக்காரித்தனம் என்று சொல்லலாம். சிலசமயம் ரொம்ப இளம்பெண் போலவும், சிலசமயம் கிழவி போலவும் தெரிந்தாள். உடம்பின் அளவுகளில் எல்லாம் கோயில் சிற்பம் மாதிரி ஒரு செயற்கை தெரிந்தது. உள்ளூர் அல்லாத ஒரு மிலேச்சத்தனம் தெரிந்தது. உள்ளூர் இல்லை, இந்த கிரகத்து மனிஷியே இல்லையோ என்று கூடத் தோன்றியது.

யோசனையுடன் அவளை நோக்கி நடந்து கொண்டிருந்த அவனுக்கு திடீரென்று ஒரு விஷயம் உறைத்தது. இரண்டு நிமிடங்களாக அவளை நோக்கி நடந்தும், இன்னமும் அதே நூறடி தூரத்தில்தான் இருந்தாள். ஹோட்டல் வாசலிலிருந்து பார்த்த போது காரைக்கால் அம்மையார் கோயில் வாசலில் இருந்தாள். இப்போது நடந்து நடந்து கோயில் வாசலுக்கு வந்து விட்டான். அவள் சாலையின் முனைக்குப் போய் விட்டாள். எப்போது நடந்தாள் அல்லது நகர்ந்தாள்?

ஒருவேளை பிரமையாக இருக்குமோ?

இல்லை, இப்போது அவனை நோக்கி அவள் நடக்க ஆரம்பித்திருந்தாள். காத்திருந்தான். வரட்டும் கேட்டு விடலாம். சாலையில் கிழவர் ஒருவர் வண்ணப் பொடியில் பெரிதாகப் படம் போட்டு விட்டு ஜனங்கள் காசு போடத் துணியை விரித்திருந்தார். மார்க்கண்டேயனுக்கு எமன் பாசக் கயிறு வீசுகிற படம். படத்தைப் பார்த்த அவனுக்கு திக்கென்றது.

படத்திலிருந்த எமனுக்குப் பெண் வேஷம் போட்ட மாதிரிதான் அவள் முகம் இருந்தது. படத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். சந்தேகமே இல்லை. அதே முகம்.

எமனா? எமனா என்னை நோக்கி வருவது?

மூன்று வருஷம் முன்னால் வைதீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் பார்க்கும் போது முத்தாய்ப்பாகச் சொன்ன செய்யுள் நினைவு வந்தது.

கீழைக் கடலருகே வாழு முன்னருகே

சோழகுலவல்லிப் பட்டணமா – மாங்கே

பொங்கு சனியுன்னைப் பிரியுமுன்னே வாழ்வு

மங்கி விடும் வாய்ப்புளதாம்.

“என்ன அர்த்தம் சாமி?” என்று கேட்ட போது ஜோசியர்

“உங்க ஊரு காரைக்கால். கிழக்கில இருக்கிற சோழநாட்டுக் கடற்கரைப் பட்டணம் அது. பொங்கு சனி நடந்துகிட்டு இருக்கு உன் ராசிக்கு. அடுத்த சனிப்பெயர்ச்சிக் குள்ளே…..” என்று நிறுத்தினார்.

“வாழ்வு மங்கறதுன்னா என்னங்க? லோ வோல்டேஜ் ஆயிடுமா?” என்று நக்கலாகக் கேட்டான். அடுத்தநாளே அதை மறந்தும் போய்விட்டான். நாளைக்கு சனிப் பெயர்ச்சி.  கிட்டே வந்து கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் எமன் தெரிகிறான். வாழ்வு மங்கும் வாய்ப்புளதாம்!

கணேஷுக்கு வியர்த்தது.

என் கதை முடிந்தது! முடிந்ததா அல்லது மார்க்கண்டேயன் தப்பித்தது மாதிரி தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா? எதற்காக அந்தப் படம் இப்போது கண்ணில் பட வேண்டும்? ஒருக்கால் தப்பித்துப் போ என்று விதி எச்சரிக்கிறதோ? அவள்… அல்லது அவன்… அருகில் வருவதற்குள் ஓடி விட வேண்டும். வேகமாக நடக்க ஆரம்பித்தான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகமாக நடந்தான். அவள் தொடர்ந்து கொண்டே இருந்தாள். ஓட ஆரம்பித்தான்.

தலை தெறிக்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினான். திரும்பியே பார்க்கவில்லை. இனிமேல் ஓட முடியாது என்கிற ஸ்டேஜ் வரும்வரை ஓடினான். மூச்சு வாங்கிக் கொள்ள நின்ற போது மஸ்தான் சாஹிப் தர்க்கா அருகே வந்திருப்பதைப் பார்த்தான். தர்க்கா வாசலிலிருந்து மைதீன் பாய் ஓடி வந்தார்.

“என்னாச்சு கணேசா? ஏன் ஓடறே?”

“துரத்தறா”

“யாரு?”

“எமன்.. எமன் துரத்தறான்”

“துரத்தறான்னு சொன்னே?”

“அவதான் அது.. எமன். அவந்தான் அவ மாதிரி”

கணேஷ் தீவிரமாகக் குழம்பியிருப்பது புரிந்தது அவருக்கு.

”முதல்லே உட்காரு. யார் துரத்தினாலும் சரி. ஹமீதை விட்டு கவனிச்சிக்கச் சொல்றேன். இங்க வா”

“இல்ல பாய்.. அவ வர்ரதுக்குள்ள நா போகணும். தப்பிக்கணும்.”

“ஏன் தப்பிக்கணும்? என்ன ஆச்சு?”

“கீழைக் கடலருகே வாழு முன்னருகே

சோழகுலவல்லிப் பட்டணமா – மாங்கே

பொங்கு சனியுன்னைப் பிரியுமுன்னே வாழ்வு

மங்கி விடும் வாய்ப்புளதாம்…… நாளைக்கு சனிப் பெயர்ச்சி. அதான் அவன் வந்துட்டான்”

“என்ன குலவல்லிப் பட்டணம், என்ன பொங்கு சனி?” பாய் கேட்டுக் கொண்டிருந்த போதே அவர்கள் அருகில் கார் ஒன்று வந்து நின்றது.

“பாய், நாகப்பட்டணம் போகணும்ன்னிங்களே, வரீங்களா?” என்றார் உள்ளேயிருந்த நபர். சாயந்திரம் நாகப்பட்டிணத்தில் அவருக்கு ஒரு வேலை இருந்தது. நேற்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.

“நா வரேன்” என்றான் கணேஷ் அவசரமாக.

“தம்பி யாரு, ஒரு ஆளுக்குதான் இடமிருக்கு” என்றார் கார்.

“அவ வந்துட்டா, அவ வந்துட்டா நா போறேன்” என்று பறந்தான் கணேஷ்.

“தம்பிக்கு ஏதோ அவசரம், அவரைக் கூட்டிட்டு போங்க. நா அப்புறம் வர்ரேன்”

கார் புறப்பட்டது.

குழப்பத்தோடு கார் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் மைதீன் பாய். என்ன ஆயிற்று இவனுக்கு? வந்தான், உளறினான், வினாடி தாமதிக்காமல் ஓடிவிட்டான்!

திடீரென்று தனக்கு அருகில் யாரோ வந்து நின்ற மாதிரி உணர்ந்தார். தர்க்கா வாசலில் படுத்திருந்த நாய் ஒன்று வெற்றிடத்தைப் பார்த்து தொடர்ந்து குலைத்தது. கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று அல்லது யாரோ அருகில் நிற்பது அவருக்குப் புரிந்தது.

“யாரது?” என்றார் பொதுவாக அந்த திசையைப் பார்த்தபடி.

பதிலில்லை.

“நீங்க வந்திருக்கிறது தெரியும்” என்றார் மறுபடி.

யாரோ தொண்டையைச் செறுமுகிற மாதிரி சப்தம் வந்தது. முணுமுணுப்பாக ஒரு குரல் கெட்டது. பேச்சில் தெளிவில்லை.

“நீதான் கணேஷைத் துரத்திகிட்டு வந்ததா?”

இப்போது வந்த பதில் கொஞ்சம் புரிந்தது, “துரத்தல்லை” என்றது குரல்.

“பின்னே?”

“இன்னும் இருபது நிமிஷத்தில் அவன் விதி முடியுது. ஆனா முடிக்கப் பட வேண்டிய இடம் இது இல்லை. எப்போ எப்படி அவன் அங்கே கிளம்பப் போறான்னுதான் பார்த்துகிட்டு இருந்தேன்”

“எந்த இடம் அது?”

“சோழகுலவல்லிப் பட்டணம்”

கணேஷும் இதைத்தானே சொன்னான்! ஒரு வினாடி துணுக்குற்றாலும் உடனே சமாளித்துக் கொண்டார். பாய் சிரித்தார்.

“சோழகுலவல்லிப் பட்டணமா? எனக்குத் தெரிஞ்சி அப்படி ஒரு பட்ணம் இந்த ஜில்லாவிலயே இல்லை”

பதிலில்லை.

“என்ன, நா சொன்னது கேட்டதா?” என்றார் ஒருதரம் உரக்க. ரோடில் போன நாலைந்து பேர் திரும்பிப் பார்த்தார்கள்.

அதற்கும் பதிலில்லை.

நாயைப் பார்த்தார். அது சாந்தமாக வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. ஆள் புறப்பட்டாகி விட்டது போலிருக்கிறது.

கடைக்குள்ளிருந்து ஹமீது வந்தான்.

“பாய், மொபைல்ல யார் கிட்டயாவது பேசிகிட்டு இருந்தீங்களா?”

இல்லை என்று சொல்ல வந்தவர் நிறுத்திக் கொண்டார். யாரிடம் பேசினோம் என்று சொன்னால் தனக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவார்கள் என்று பயந்து, “ஆமாம்” என்றார்.

“சோழகுலவல்லிப் பட்டணம்ன்னு ஒரு ஊர் இந்த ஜில்லாவிலயே இல்லைன்னு சொன்னீங்களோ?”

“ஆமாம்”

”தப்புங்க”

“என்னா தப்பு?”

“தமிழ் வாத்யார் சோமசுந்தரம் தெரியுமில்ல?”

“யாரு, பி.சோ. வா?”

“ஆமாம், அவரு போன வாரம் பேசிகிட்டு இருக்கிறப்ப சொன்னார்.”

“என்ன, சோழகுலவல்லிப் பட்டணம் இருக்குன்னா?”

“ஆமாம்”

“எங்க இருக்குதாம்?”

“இப்ப பேர் மாறிப் போச்சு. முற்காலச் சோழர்கள் காலத்தில் அப்படி ஒரு பேர் இருந்ததாம் அந்த ஊருக்கு”

“சரி இப்ப என்னா பேரு?”

“நாகப்பட்டணம்”

(ஜெஃப்ரி ஆர்ச்சர் ஃபேரிடேல் மாதிரி ஒரே பாராவில் ’டெத் ஸ்பீக்ஸ்’ என்கிற ஒரு குட்ட்ட்ட்ட்டிக் கதை எழுதியிருக்கிறார். அதைத் தமிழ் வாசகர்கள் ரசிக்கிற விதத்தில் பகிர வேண்டும் என்கிற ஆசையில் எழுதப்பட்டது)

தமிழ்ப் ‘படுத்தல்’

”நான் பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்றதில்லை” என்று ஒருவர் சொல்வது ஒரு மாயச் சுழல். அது பொய் என்றால் என்ன அர்த்தம், நிஜம் என்றால் என்ன அர்த்தம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை நான் செய்து கொண்டிருந்த போது ஒரு போலிஷ் (போலிஸ் இல்லை) ஜோக் ஞாபகம் வந்தது.

ஒரு போலந்துக்காரரை பிஸியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

பி.டி.ஓ என்று இரண்டு பக்கமும் எழுதிய ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்து விட்டால் போதும்!

************************************************************************

வேற்று மொழியிலிருந்து ஒரு கதையைத் தமிழில் எழுதும் போது அடிப்படையான சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் என்ன ஆகும்? கீழ்வரும் வரிகளைப் படியுங்கள் :

சோட்டா சேட் ஜூனா பஸாரில் பாவு பாஜி சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்தான். பட்பட் வாலா அருகில் நிறுத்தி வருகிறாயா என்கிற மாதிரிப் பார்த்தான். வாஸ்வானி சிலை பக்கத்தில்தான் இருக்கிறது செளரங் லேன். அதற்குப் போய் பட்பட்டில் போவானேன்?

இதே ரீதியில் முழுப் புத்தகத்தையும் உங்களால் படிக்க முடிந்தால் நீங்கள் ஒரு முரட்டு இலக்கிய ரசிகர். ஆனால் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அப்படி இல்லை.

போன வாரம் ‘வாகை சூடும் சிந்தனை’ என்றொரு புத்தகம் வாங்கினேன். அது தமிழாக்கம் செய்யப்பட்ட சுய முன்னேற்ற நூல். முழுக்க முழுக்க டிவியில் காலையில் வரும் டப்பிங் செய்த கிறிஸ்தவ நிகழ்ச்சி போலவே இருக்கிறது.

************************************************************************

அறிவகற்றும் என்கிற பதத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அறிவில்லாமல் செய்து விடும் என்றுதான் தொண்ணூறு சதவீதம் பேர் பதில் சொல்கிறார்கள். கீழ் வரும் குறளில் அந்தப் பதம் அறிவை விசாலப்படுத்தும் என்கிற பொருளில் வருகிறது :

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

இல்லை என்கிறவர்கள் பின்னூட்டலாம்!

***********************************************************************

சளியால் காது அடைக்கிற போது எந்த மருந்தும் பயன்படாது போலிருக்கிறது. மூக்குக்கும், காதுக்கும் டிராப்ஸ் கொடுத்தார் டாக்டர். ஐந்தாறு பாட்டில் வாங்கி ஊற்றி கழுத்துவரை நிறைத்தும் பிரயோஜனமில்லை. காக்காய் மாதிரி தலையைச் சாய்த்துச் சாய்த்துத்தான் கேட்கிறேன் யாராவது பேசும் போது.

இதே பிரச்சின சில வருஷங்களுக்கு முன் வேலூரில் இருந்த போது வந்தது. அப்போது வாசன் என்று ஒரு டாக்டர், “நீங்க செவிடெல்லாம் ஆயிட மாட்டீங்க. இதுக்கு மருந்தெல்லாம் இல்லை. ஆப்பரேஷன் டூ மச். மூக்கைப் பொத்திகிட்டு எச்சல் முழுங்கிகிட்டே இருங்க, ப்ளக்குன்னு விட்டுடும். உடனே நடக்காது பொறுமையா பண்ணிகிட்டே இருங்க” என்று அட்வைஸ் செய்தது நினைவு வந்து அதை முயற்சித்தேன்.

பிளக்கென்று வலது காது திறந்தது என்னவோ நிஜம்தான்.

ஆனால் பச்சக் என்று இடது காது அடைத்துக் கொண்டு விட்டது!

இலக்கிய எழுத்தும் வெகுஜன எழுத்தும்

பயப்பட வேண்டாம். இது சீரியஸான திறனாய்வுக் கட்டுரை அல்ல. ஆகவே இலக்கியவாதிகள் என் மேல் பாயத் தயாராக வேண்டாம்.

பிரபல பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்களைப் பிரசுரத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனவா? உங்களைத் தவிர யாருக்கும் (அல்லது உங்களுக்கே கூட) என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லையா? உரையாடலே இல்லாமல் வெறும் நேரேஷனாக முழ நீளப் பாராக்களாகவேதான் எழுதுவீர்களா? எழுத்தில் பொதுவாக ஒரு இறுக்கமும், கடுப்பும் தெரிகிறதா? ஒரு பாராவில் சொல்ல வேண்டியதை எண்ணூறு பக்கங்களில் எழுத உங்களால் முடியுமா? வட்டார வழக்கு என்கிற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைநாட்டுக்கள் மட்டுமே உபயோகித்து வரும் சொல்லாட்சிகள் (அசிங்கமான வசவுகள் உட்பட) உங்களுக்குத் தெரியுமா, அதைப் புகுத்த வேண்டும் என்பதற்காகவே கதைக்குச் சம்பந்தமில்லாத சம்பவங்களை அமைக்கத் தெரியுமா?

எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கு மிஞ்சின இலக்கியவாதி கிடையாது.

நீங்கள் உடனடியாக, கைக்காசு செலவழிந்து நஷ்டமாகிற அளவு சொற்பமாக விற்கிற ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்தது போல அந்தப் பத்திரிகைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும். அட்டையில் வருகிற எழுத்துக்கள் எல்லாமே குழந்தை கிறுக்கின மாதிரி கோணல் மாணலாகவே இருக்க வேண்டும். பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களும் சரி நீங்களும் சரி மறந்தும் சிரித்து விடக் கூடாது.

இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது. இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது,

சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிராபல்யம் உள்ளவர்களை எழுத்து வியாபாரி (அல்லது எழுத்து விபச்சாரி) என்று வைவது, எல்லாவற்றிலும் கோணக் கட்சி பேசுவது, பிரபலமடைந்த, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது என்றெல்லாம் பரபரப்பைத் தருகிற எதுவானாலும் எந்த எத்திக்கும் இல்லாமல் செய்ய வேண்டும். உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும்.

உங்கள் எழுத்துக்கள் நிறைய பிரசுரம் ஆகி, நிறையப் பேர் படித்து, உங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் வெகுஜன எழுத்தாளர். குட்டிக் கரணம் அடித்தாலும் உங்கள் எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது.