சூடா என்னப்பா இருக்கு?

”என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்ட சர்வரின் குரல் பரிச்சயமாக இருந்ததில் புத்தகத்தை மூடி விட்டு சட்டென்று நிமிர்ந்தேன்.

வைத்தி!

என்ன ஆயிற்று இவனுக்கு! பிரபலக் கம்பெனியில் மேனேஜராக இருந்தான், நல்ல சம்பளம்…. பையன்களும் நன்றாக செட்டில் ஆகி விட்டார்கள்…..

ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கிற அளவுக்கு என்ன ஆயிற்று?

“ஏய்… நீ வைத்திதானே?”

“நான் வைத்திதான், நீங்க யாரு தெரியலையே?”

“ஏய்.. என்ன விளையாடறியா? மூணு மாசம் பார்க்கல்லைன்னா ஆளை மறக்கிறவனா நீ? வேலை என்னடா ஆச்சு? ஏசி ரூம், பி.ஏ., பதினஞ்சு சப் ஆர்டினேட்டுங்க…. நல்லாத்தானடா இருந்தே?”

“ஏசியாவது, தூசியாவது. எனக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் இதான். ஆரம்பத்திலே டேபிள் துடைச்சிருக்கேன். அஞ்சாறு ஹோட்டல் மாறி இப்ப சர்வர். செத்தாலும் சரக்கு மாஸ்டருக்கு மேலே போ முடியாது. மன்னிக்கணும் சார், நான் அந்த வைத்தி இல்லை. என்ன சாப்பிடறீங்க சொல்லுங்க…. எல்லாரையும் கவனிக்க வேண்டாமா?”

“ஒரு பொங்கல் வடை கொண்டாங்க” என்று யோசனையோடு சொன்னேன்.

இவன் வைத்திதான்.

என்ன காரணத்துக்காகவோ பொய் சொல்கிறான். என்ன நடந்திருக்கும்? ஆபிசில் ஏதாவது கேசில் மாட்டி பி.எப். கிராஜுவிட்டி எல்லாவற்றையும் கட்டி சரி பண்ணுகிற அளவு போயிருக்குமோ? அந்த அவமானம் தாங்காமல் பெண்டாட்டி, பிள்ளைகள் முகத்தில் முழிக்கவே பயந்து இப்படி வேலூரில் வந்து சர்வர் வேலை பார்க்கிறானோ?

இருக்க முடியாதே!

அவன் மஹா நாணயமானவன் ஆயிற்றே….

போலீசுக்கு பயந்து தலை மறைவு ஆகிற மாதிரி ஏதாவது…..

ம்ம்ஹூம்….

வேறே எண்ணமே ஓடவில்லை எனக்கு. மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

“யோவ்… தண்ணியை முதல்ல வைக்கணும்ன்னு அறிவு கிடையாதாய்யா உங்களுக்கெல்லாம்?” என்று ஒரு ஆள் எழுந்து சத்தம் போட

“சாரி சார், கோபப் படாதிங்க. உங்களுக்கு ஐஸ் வாட்டர்தானே எப்பவும் கேப்பீங்க…. கூலிங் மிஷின் கொஞ்சம் பிரச்சினை… அதான் ஐஸ் போட்டு கொண்டு வந்தேன்” என்று அசடு வழிய சிரித்தான் வைத்தி.

எனக்கு ரத்தக் கண்ணீரே வரும் போல இருந்தது.

“ஏன்ய்யா… பதினஞ்சு வருஷமா கம்பேரிட்டிவ் ஸ்டேட்மெண்ட் போடறீங்க… கமர்ஷியல்ஸ் தனியா டெக்னிகல்ஸ் தனியா போடணும்ன்னு கூட சொல்லித்தரணுமா?” என்று பர்ச்சேஸ் ஆபிசரை டோஸ் விட்டு ஸ்டேட்மெண்ட்டை முகத்தில் விசிறி அடிக்கிற வைத்தியா இது!

“யோவ்.. நாலு டேபிள் பாக்க முடியாதவன் எல்லாம் ஏன்ய்யா சர்வரா வர்றீங்க? ஸ்பெஷல் வடை வருமா வராதாய்யா? ஏன்ய்யா இவ்வளவு லேட் பண்றீங்க?” என்று நாய் மாதிரி விழுந்தவனை

“லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும்ண்ணா.. கோபப்படாதீங்க” என்று அரேபிய அடிமை மாதிரி இடுப்பை வளைத்து காமிக் செய்தான்.

ஒருவேளை அம்னீஷியா கிம்னீஷியா வந்து பழசெல்லாம் மறந்திருக்குமோ?

“யோவ் வைத்தி வர்றவங்க டிப்ஸ் தர்றாங்கங்கிறதுக்காக அழுக்கு நோட்டை எல்லாம் வாங்கி என் கழுத்தை ஏன்ய்யா அறுக்குறே?” என்றார் கால்லாப் பெட்டி சிங்காரம்.

“சாரி சார், கவனிக்கல்லை. நான் வேணா தர்றேன்… செல்லாத நோட்டை என்கிட்ட குடுங்களேன்”

“யோவ் அண்டர்வேர் பாக்கெட்ல அழுக்கு பத்து ரூபா வெச்சிருக்கிற நீ எனக்கு சலவை ஆயிரம் ரூபா நோட்டு தரப் போறியா?”

“ஆயர்ரூபாவா? அத நான் பாத்ததே இல்ல கொஞ்சம் காட்டுங்க?”

“உன் முகரைக்கட்டைக்கு ஜோக் வேறேயா? அங்க சட்னி கேக்கறாங்க பாரு”

“அதெல்லாம் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருப்பேண்ணா” என்று சட்னி வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.

எனக்கு அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை.

சாப்பிட்ட வரை போதும் என்று எழுந்தேன்.

எனக்கு வேலூரில் ஒருநாள்தான் வேலை.

வெடி மருந்து கம்பெனியில் ஒரு ஆர்டர் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன் ஆட்டோவில்.

கிறிஸ்டியான் பேட்டைக்குப் பக்கத்தில் ஒரு விளக்கில்லாத குடிசை வாசலில் மறுபடி அவனைப் பார்த்தேன். ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அக்கடா என்று படுத்திருந்தான்.

ஆட்டோவை நிறுத்தி இறங்கிக் கொண்டேன்.

என்னைப் பார்த்ததும் எழுந்து,

“வா…. வா….. நரசிம்மா. நான் இங்கதான் இருக்கேன்னு எப்டி தெரிஞ்சுது?” என்று சிரித்தான்.

“இப்பதான் நான் நரசிம்மன்னு அடையாளம் தெரிஞ்சுதாக்கும்?”

“அங்க முதலாளிக்கு எதிர்ல ஏடாகூடமா கேள்வி கேட்டு என்னை தர்ம சங்கடப் படுத்திட்டே”

“முதலாளி! ஹும்… கேக்கவே நாராசமா இருக்குடா…. யுனிட் ஹெட்டையே ஹாய் ஹரின்னு கூப்ட்டவன் நீ…. இந்த இட்லிக்கடை ஓனர் முதலாளியா!”

“பணம் போட்டவன், சம்பளம் தர்றவன் முதலாளிதானேடா.. அது இட்லிக் கடையானா என்ன இண்டர்னெஷனல் கம்பெனியா இருந்தா என்ன?”

”போதும் உன் தத்துவம். மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. என்ன ஆச்சு சொல்லு…. முதல்லே எப்படி உன்னாலே சிரிக்க முடியுது அதைச் சொல்லு”

“நீ என்ன நினைச்சே… அதைச் சொல்லு முதல்லே”

“நான் என்னென்னமோ நினைச்சேன். அதெல்லாம் எதுக்கு… நீ சொல்லு, என்ன ஆச்சு?”

“அட நீ என்னதான் நினைச்சேன்னு சொல்லேன்”

“ஆபிஸ் பணத்தைக் கையாடிட்டோ அல்லது சப்ளையர்ஸ் கிட்ட லஞ்சம் வாங்கியோ மாட்டிகிட்டே போலிருக்கு, அதனாலே உன் பி.எப். கிராஜுவிட்டி எல்லாத்தையும் சுத்த ஷவரம் பண்ணி உன்னைத் துரத்திட்டாங்கன்னு நினைச்சேன்”

“பரவாயில்ல நல்லா ஆழமா யோசிச்சிருக்கே. அப்புறம்?”

“நீ வயசுக்கு சம்பந்தம் இல்லாம சின்னப் பொண்ணுங்க கிட்டயெல்லாம் இசகு பிசகான பிரெண்ட்ஷிப் வெச்சிருப்பே. அதுல ஏதோ ஏடாகூடம் ஆகி போலிஸ் கேஸ் ஆயிரிச்சோன்னு நினைச்சேன்”

“இது நல்லா இருக்கு. நாலு பேருக்கு இதச் சொன்னேன்னா என் இளமை இமேஜ் மெயிண்டைன் ஆகும்.. அப்புறம்?”

“அப்புறம் என்ன, ஏதோ ஆக்சிடெண்ட்டில மூளை குழம்பி அம்னீஷியா வந்திருச்சோன்னு நினைச்சேன்”

“இது சரியில்லை. ரொம்ப சினிமேட்டிக்கா இருக்கு… வேறே ஏதாவது?”

“இவ்வளவுதான் என்னால நினைக்க முடிஞ்சது. நீ சொல்லு. என்னால இனிமே பொருமையா இருக்கவே முடியாது”

“சம்பாதிச்ச வரைக்கும் போதும். செட்டில் ஆயிடலாம்ன்னு ரிசைன் பண்ணேன்”

“அப்பறம் எதுக்கு இந்த பரிச்சாரகன் வேலை?”

“மெட்ராசில வீடு இருக்கு. நானும் என் வைஃபும் சாப்பிடற அளவு காசும் இருக்கு. பிரெண்ட்ஸ் வீட்டுக்கோ சொந்தக்காரங்க வீட்டுக்கோ இனிமே அடிக்கடி போக வேண்டியிருக்கும்”

“அதுக்கும் இந்த உத்யோகத்தும் என்ன சம்பந்தம்?”

“என்னை யாரும் இனிமே மேனேஜரா பார்க்கப் போறதில்லை. வைத்தியாத்தான் பார்ப்பாங்க. இவன் ஒரு வேலை வெட்டி இல்லாதவன், இங்க வெறும் பொழுது போக்க வந்துட்டான்னு யாரும் நினைக்கக்க் கூடாது இல்லையா? முக்கியமா என் மருமகளுங்க…”

“அதுக்கு?”

“அதுக்கு என் மனசில இருக்கிற மேனேஜர் முதல்ல வெளில போகணும். நாலு பேருக்கு உபகாரம் பண்ற மனப்பான்மை வரணும். யாராவது அதிகப்படியா பேசினா அதை புன்சிரிப்போட ஏத்துக்கிற மனப்பான்மை வேணும். மனிஷங்களை சம்பாதிச்சிக்கத் தெரியணும்”

“அதுக்குன்னு இந்த வேலையா?”

“இந்த வேலைதான் அதுக்கு பெஸ்ட். பார்த்தே இல்லை, வர்றவனெல்லாம் எப்படிப் பேசறான்னு? முதல் ரெண்டு நாள்லயே என் மமதை பூரா அடங்கிப் போச்சு. அமெரிக்காவில கட்டாய ராணுவ சேவை மாதிரி ஜென் துறவிகள் கொஞ்ச நாள் பிச்சைக்காரங்களா இருந்து பார்ப்பாங்களாம். அந்த மாதிரி….”

“அந்த மாதிரி? அடுத்த மாசம் கோயம்பேடு சிக்னல்ல பிச்சை எடுக்கப் போறியா?”

“தேவையில்லை. ஏற்கனவே மனசு ஒரு நல்ல பதத்துக்கு வந்திடுச்சு. கையில ஒண்ணுமே இல்லாம இப்படி நடந்தோம்ன்னா மரியாதை இருக்காது. நிறைய பணம் இருந்தா பணியற மனப்பான்மையே வராது. ஓரளவு பணம் வெச்சிக்கிட்டு இப்படி இருந்தோம்ன்னா இந்தப் பணிவுக்கு மரியாதை கிடைக்கும்”

“ஆக மரியாதையை விட்டு, மரியாதையைக் காப்பாத்திக்கிறது எப்படின்னு கத்துகிட்டே?”

“சரியாச்சொன்னே. பணம் குடுத்துப் படிக்கறோம். படிச்சப்புறம் அந்த பணத்தை சம்பாதிக்கிறது இல்லையா? அது மாதிரின்னு வெச்சிக்கயேன். இப்பப் பாரு, ஊருக்குப் போனா என் மருமகளுக்கு காய் நறுக்கித் தருவேன். கடைக்குப் போய்ட்டு வருவேன். காபி போட்டுத் தருவேன். வந்துட்டானா வெத்து வேட்டு’ன்னு பல்லைக் கடிக்கிறதுக்கு பதில் ‘மாமா ஏன் இன்னும் வரல்லை’ன்னு வாசலைப் பார்ப்பா இல்லே?”

“ஞானம் வரணும்ன்னா ஹோட்டல் சப்ளையர் ஆகணும்ங்கிறே?”

“அதேதான்”

“இந்த மாதிரி ஏதாவது கதை பின்னால இருக்கும்ன்னு நினைச்சேன்”

“இந்தக் கதை விடற வேலைதானே வேண்டாம் என்கிறது. பின்னே எதுக்கு அன்னிக்கு எழுந்து போறப்போ பத்து ரூபாய் டிப்ஸ் வெச்சே?”

(போன வாரம் ஆனந்த பவன் ஓட்டலில் அமெரிக்க சிவப்பும், மூவாயிரம் ரூபாய் வாட்சும், வுட்லெண்ட்ஸ் ஷூவுமாக ஒரு ஐம்பது வயது மனிதர் சப்ளை செய்வதைப் பார்த்தோம் நானும் என் மகனும். ஒருவேளை ஓட்டல் சொந்தக்காரரின் உறவினரோ என்று அறிய ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தோம். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.

“இதைப்பத்தி நீ என்னப்பா நினைக்கிறே?” என்று என் மகன் கேட்டான்.

நான் என்ன நினைத்தேனோ அதைத்தான் கதையாக எழுதியிருக்கிறேன்)

31 comments

  1. கதையாக இல்லை. நிஜமாகவே நாலு பேருக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகப்படி பேசினால் அதை புன் சிறிப்போடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, நாம் சேவை செய்யப் பிறந்திருக்கிரோம் என்ற மனப்பான்மை இந்த மாதிரி மனப் பான்மைகளெல்லாம் மேனேஜருக்கு மட்டுமில்லை, மாமியார்களுக்குமிருந்தால லோகமே பிழைத்துப் போய்விடும். மாமியார்கள் வாழ்க கோஷம் போடுவார்கள்.

    1. chollukireen : மாமியார்களும் மேனேஜர்கள்தானே…. குடும்பத்தோட ஒற்றுமை, பிரியம், சந்தோஷம் இதையெல்லாம் மேனேஜ் பன்றதுதான் அவங்க வேலை. மருமகளை மேனேஜ் பண்ண ஆரம்பிக்கிறப்பொதான் பிரச்சினையே.

  2. நெற்றியில் பொட்டென்று அறைந்தது போல இருந்தது – உங்கள் கதையின் இன்சைட் மீனிங் பார்த்த போது. மேனேஜர் ஆனால் எவ்வளவு தான் மாறுகிறோம்! அன்டு பண்ண கஷ்டம்.

    என் தங்கைக்கு வரன் தேடிய போது, பெரியநாயகன்பாளையத்தில் ஹோட்டல் வைத்திருந்த வசதியான குடும்பம் சேர்ந்த ஒருவரை, அவர் சப்பளை செய்தார் ( ஸ்பை செய்ய செல்வார்கள் – விசாரிக்க? ) என்பதற்காக எங்கள் அத்தை – அப்பாவின் முதல் தங்கை – அவரை நிராகரித்தார். பிற்பாடு அவர் ரிசார்ட் என்று பல லெவல்கள் முன்னேறியது தெரிந்தது! வாழ்க்கை பாடம்.

  3. சுவையான கற்பனை. பிரபல ஹோட்டல்களில் – ரூம் பாயாக – வேலை பார்க்க முடியுமா – என்று சில சமயங்களில் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் முடியாது என்று தோன்றும் – ரூமில் இருப்பவர்கள் – என்னை குடிப்பன / புகைப்பன – வாங்கி வரப் பணித்தால் – – – அப்பொழுதே வேலையை விட்டு ஓடிவிடுவேன் என்று தோன்றுகிறது.

  4. // நாலு பேருக்கு உபகாரம் பண்ற மனப்பான்மை வரணும். யாராவது அதிகப்படியா பேசினா அதை புன்சிரிப்போட ஏத்துக்கிற மனப்பான்மை வேணும். மனிஷங்களை சம்பாதிச்சிக்கத் தெரியணும்”//

    இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. உதவும் மனப்பான்மை வரவேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயமாக போய்விட்டது… இந்த காலாத்தில்.

  5. அருமையான மேலாண்மை பாடம் .. உரையாடலில் நட்பாக வந்த வரிகளெல்லாம் எளிமையில் புரிந்து கொள்ளும் தத்துவங்களாக இருந்தன .
    இதை உண்மைகதையாகவே விட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்துருக்குமே என்று சின்ன ஏக்கம் மிச்சமாக நிற்கிறது.
    அதுதான் இந்த கதையின் வெற்றி .

  6. பதிவு பிரமாதம்! உங்க பையன் இன்னும் நெறைய கேள்வி கேட்டாருன்னா இன்னும் நல்லாருக்கும் போலிருக்கே 😉

    “ஆக மரியாதையை விட்டு, மரியாதையைக் காப்பாத்திக்கிறது எப்படின்னு கத்துகிட்டே?”
    இது நெறைய யோசிக்க வைக்கிற வரிகள்!
    தொடரட்டும் சுவாரசியங்கள்…… நன்றி!
    http://padmahari.wordpress.com

  7. அமெரிக்கன் பியூட்டியா?ஆங்கிலப் படம் எதுவென்று நினைவில்லை.கார்பரேட் வேலைய விட்டுட்டு KFC வேலைக்குப் போன மாதிரி இருக்கு.கேட்டா சம்பளம் குறைவா இருந்தாலும் டென்ஷனில்லாம இருக்கணுமாம்.

  8. மொதல்லயே வந்து பார்த்தேன். எல்லாம் சூடாக இருந்த து. ஆறின பிறகு வரலாம் என்று போய்விட்டேன்.

    நல்ல கரு, கதையாக உருவெடுத்திருக்கிறது

  9. நல்லாருக்கு 😉 இதே (அமெரிக்க சிவப்பும், மூவாயிரம் ரூபாய் வாட்சும், வுட்லெண்ட்ஸ் ஷூவுமாக ஒரு ஐம்பது வயது மனிதர் )போல் இங்க சிங்கப்பூர் ஆனந்த பவனிலும் ஒருவரை பார்த்திருக்கிறேன்.சீன முகம் , இந்து அடையாளங்கள்,தமிழர் என நினைக்கிறேன்……

    அன்புடன்
    சிங்கை நாதன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!